தெலுங்கானா தொழிற்சாலை வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு

வெடி விபத்தில் உயரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி கருணைத்தொகை வழங்கப்படும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தில் பாஷமிலராம் தொழிற்பேட்டையில் மருந்து தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் கடந்த 30-ந்தேதி ரசாயன கலவை எந்திரம் திடீரென வெடித்து சிதறியதில் தொழிற்சாலையில் உள்ள கட்டிடமும் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் அதிகாரப்பூர்வ இறப்பு எண்ணிக்கை 38 ஆக இருந்தது.
தற்போது இந்த தனியார் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "தொழிற்சாலையில் நடந்த விபத்து குறித்த விவரங்களை நாங்கள் மிகுந்த வேதனையுடன் பகிர்ந்து கொள்கிறோம். தீ விபத்தில் 40 பேர் உயிரிழந்தனர். 33 பேர் காயம் அடைந்தனர். உயரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ₹1 கோடி கருணைத்தொகை வழங்கப்படும். அதே நேரத்தில் காயமடைந்தவர்களுக்கு முழு மருத்துவ மற்றும் மறுவாழ்வு உதவியும் கிடைக்கும். ஆலை செயல்பாடுகள் சுமார் 90 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்" என்று தெரிவித்தது.






