

புதுடெல்லி,
வேட்பாளர்களின் குற்றப்பின்னணியை வெளியிடாத அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்யக்கோரி வக்கீல் அஸ்வினி உபாத்யாயா சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்களுக்கு வாய்ப்பளித்ததற்கான காரணங்களை அரசியல் கட்சிகள் அவற்றின் இணையதளத்திலும், குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்கள் விவரங்களை காட்சி, அச்சு, சமூக ஊடகங்களிலும் 48 மணி நேரத்துக்குள் அரசியல் கட்சிகள் வெளியிடுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.
அவ்வாறு வெளியிடாத அரசியல் கட்சிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மற்றும் அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்யக்கோரியும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து, அங்கீகரிக்கப்பட்டுள்ள சமாஜ்வாதி கட்சி உத்தரபிரதேச தேர்தலில் தீவிர குற்றப்பின்னணி கொண்ட நஹீத் ஹாசனுக்கு கைரானா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதையும் அந்த பொதுநல மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.