

புதுடெல்லி,
விமான பயணிகள் முகக்கவசம் உரிய முறையில் அணியாவிட்டால், அவர்களை தொடர்ந்து பயணம் செய்ய அனுமதிக்கக் கூடாது என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து ஒழுங்கு முறை அமைப்பு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், டிஜிசிஏவின் இந்த உத்தரவு வெளியாகியுள்ளது. திரும்ப திரும்ப அறிவுறுத்தியும் முகக்கவசத்தை உரிய முறையில் பயணி அணிய மறுத்தால், விமானத்தில் இருந்து இறக்கிவிட வேண்டும் எனவும் கொரோனா தடுப்பு விதிகளை மீறினால், ஒழுங்கற்ற முறையில் நடந்து கொண்டதாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
உள்நாட்டு விமான போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை நாட்டில் பல இடங்களில் அதிகாரித்து உள்ள சூழலில், இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்குள் நுழைவது முதல் வெளியேறுவது வரை கொரோனா தடுப்பு விதிகளை கடுமையாக பின்பற்ற வேண்டும். இதை மீறுபவர்கள் உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.