கடன் தொல்லை; ஒருவரை ஒருவர் கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்ற தம்பதி - கணவர் பலி

உயிர் பிரியாத நிலையில் வலி தாங்க முடியாமல் தவித்த ரம்யா கிருஷ்ணா பின்னர் போலீசாருக்கு தகவல் அளித்தார்.
கடன் தொல்லை; ஒருவரை ஒருவர் கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்ற தம்பதி - கணவர் பலி
Published on

அமராவதி,

ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டம் கே.பி.ஹெச்.பி காலனியில் வசித்தவர் ராமகிருஷ்ணா ரெட்டி (வயது 45). இவரது மனைவி ரம்யா கிருஷ்ணா (வயது 38). இவர்களுக்கு 17 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை.

ராமகிருஷ்ணா ஒரு யூடியூப் சேனலில் பணியாற்றி வந்தார். முன்னதாக பல வியாபாரங்கள் செய்து பொருளாதார ரீதியாக நஷ்டம் அடைந்து இருந்தார். இதனால் கடன் தொல்லை அதிகமானது. கடந்த சில மாதங்களாக கடன் கொடுத்தவர்கள் கடனை அடைக்கும்படி நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர்.

ஆனால் கடனை அடைக்க வழிதெரியாததால், ராமகிருஷ்ணா, மனைவியுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். அவர்கள் கத்தியால் குத்தி தற்கொலை செய்வது என்று முடிவு செய்தபோதும், தங்களை தாங்களே கத்தியால் குத்திக்கொள்ள பயந்துள்ளனர். இதனால் ஒரே நேரத்தில் ஒருவரை ஒருவர் மாறி, மாறி குத்திக்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.

கடந்த நான்கு நாட்களாக இப்படி ஒருவரை ஒருவர் கத்தியால் குத்திக்கொண்டனர். இதில் வயிற்று பகுதியில் தீவிர ரத்தப்போக்கு ஏற்பட்டு ராமகிருஷ்ணா வெள்ளிக்கிழமை மரணம் அடைந்தார். படுகாயம் அடைந்திருந்த ரம்யா கிருஷ்ணா, கணவரது பிணத்துடனே சனிக்கிழமை வரை சோர்வுடன் கிடந்தார். உயிர் பிரியாத நிலையில் வலி தாங்க முடியாமல் தவித்த ரம்யா கிருஷ்ணா பின்னர் போலீசாருக்கு தகவல் அளித்தார்.

போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது ராமகிருஷ்ணா இறந்து கிடந்தார். ரம்யா கிருஷ்ணா ஷோபாவில் உட்கார்ந்து இருந்தார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ராமகிருஷ்ணா ரெட்டியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கடன் கொடுத்தவர்களின் தொல்லையால் அவமானங்களை தாங்க முடியவில்லை. இந்த உலகத்தில் எங்களால் வாழ முடியவில்லை. அதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து கொண்டோம் என்று எழுதியிருந்த கடிதத்தை போலீசார் ராமகிருஷ்ணா அறையில் கைப்பற்றினர். 15 நாட்களுக்கு முன் இந்த கடிதம் எழுதப்பட்டிருந்தது.

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மூன்று மாதங்களுக்கு முன்பே தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்ததாக ரம்யா கிருஷ்ணா போலீசாரிடம் தெரிவித்து உள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com