

குறைந்த அளவு இருப்பு கொண்ட 7 லட்சம் இபிஎப்ஓ கணக்குகளில் உள்ள தொகையை, எவ்வித விண்ணப்பமும் இன்றி நேரடியாக சந்தாதாரரின் வங்கி கணக்கிற்கு தானாகவே திருப்பி அனுப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இபிஎப்ஓ எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் பல ஆண்டுகளாக உரிமை கோரப்படாமல் இருக்கும் சிறு தொகையை திரும்ப வழங்கும் முக்கிய நடவடிக்கையை மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.
இதன்படி, 7 லட்சத்திற்கு அதிகமான செயல் இழந்த கணக்குகளில் உள்ள நிதி, எவ்வித விண்ணப்பமும் இன்றி நேரடியாக சந்தாதாரரின் வங்கி கணக்கிற்கு செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக இருப்பு வைத்துக் கொண்டு நீண்ட காலமாக செயல்பாடு இல்லாத 7.16 லட்சம் கணக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த கணக்குகளில் உள்ள தொகையை சம்பந்தப்பட்ட ஆதார் கணக்குடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் தானாகவே வரவு வைக்கும் பணியை தொடங்கியுள்ளது.
இந்த நடைமுறைக்காக சந்தாரார்கள் எந்த ஒரு படிவத்தையும் சமர்பிக்க வேண்டியது இல்லை. அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டியது இல்லை. சாந்தாரார்கள் உயிரிழந்து இருந்தால் அவர்களின் வாரிசுகள் அல்லது நாமினிகளுக்கு இந்த தொகை வரவு வைக்கப்பட்டது. பொதுவாக ஒரு பிஎப் கணக்கிற்கு 36 மாதங்கள் பங்களிப்பு வரவில்லை என்றால், அது செயல் இழந்த கணக்கு என்று கருதப்படும்.