

புதுடெல்லி,
நாட்டில் நாளுக்குநாள், புதிய சாதனை அளவுடன் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதுவரை இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒன்றரைக் கோடியை நெருங்கியுள்ளது. கடந்த 4 நாட்களாக தினமும் 2 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மராட்டியம், டெல்லி, குஜராத், பஞ்சாப், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்கள் ஊடரங்கை பிறப்பித்து மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல மாநிலங்களுக்கு தடுப்பூசி ஆக்ஸிஜன் பற்றாக்குறையும் நிலவி வருகிறது.
இந்நிலையில், தேசிய சுகாதார அவசரநிலையை பிரதமர் மோடி அறிவிக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் தலைவருமான கபில் சிபல் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கொரோனா தொற்றில் இருந்து மீளும் வேகத்தைவிட, அதன் பாதிப்பு வேகம் அதிகமாக இருக்கிறது. மோடிஜி, தேசிய சுகாதார அவசர நிலையை அறிவியுங்கள். தேர்தல் ஆணையம், தேர்தல் பிரசாரங்களுக்குத் தடை விதிக்க வேண்டும். நீதிமன்றங்கள், மக்களின் உயிர்களைக் காக்க வேண்டும் என்று கபில் சிபல் தெரிவித்தார்.