ஐக்கிய அரபு அமீரகத்தில் அணு மின் நிலையம் மீது டிரோன் தாக்குதல்; இந்தியா கண்டனம்

அணு மின் நிலையத்தின் மின்சார ஜெனரேட்டர் தீப்பற்றி எரிந்தது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் அணு மின் நிலையம் மீது டிரோன் தாக்குதல்; இந்தியா கண்டனம்
Published on

டெல்லி,

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் உள்ள அல் தப்ரா பகுதியில் பரக்கா அணு மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதனிடையே, இந்த அணு மின் நிலையம் மீது நேற்று டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் அணு மின் நிலையத்தின் மின்சார ஜெனரேட்டர் தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து தீயணைப்புத்துறையினர், பாதுகாப்புப்படையினர் பற்றி எரிந்த தீயை உடனடியாக அணைத்தனர். இந்த தாக்குதலில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கதிர் வீச்சு அபாயம் இல்லை என்றும் அந்நாட்டின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

அணு மின் நிலையம் மீது தாக்குதலை நடத்தியது யார்? என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. ஈரானுக்கு எதிரான அமெரிக்கா, இஸ்ரேலின் மோதலின்போது ஐக்கிய அரபு அமீரகம், சவுதி உள்பட பல்வேறு அரபு நாடுகள் மீது ஏவுகணை, டிரோன் தாக்குதல்கள் நடந்துள்ளன. அதேவேளை, இந்த தாக்குதல் மத்திய கிழக்கில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அணு மின் நிலையம் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பரக்கா அணுமின் நிலையத்தின் மீது நடத்தப்பட்ட டிரோன் தாக்குதல் மிகுந்த கவலையளிக்கிறது. இந்த தாக்குதல் கண்டனத்திற்குரியது. இந்த தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது. அனைத்து தரப்பும் மோதலை தவிர்த்து பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும்’ இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com