

புதுடெல்லி,
மத்திய பாதுகாப்பு அமைச்சகமானது 12 இலகுரக ஹெலிகாப்டர்கள் உட்பட ரூ.7,965 கோடி மதிப்பிலான ஆயுதங்கள் மற்றும் ராணுவ உபகரணங்களை வாங்குவதற்கு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்த விவகாரத்தில் முக்கிய முடிவெடுக்கும் அமைப்பான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலின் (டிஏசி) கூட்டத்தில் கொள்முதல் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து 12 ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கான திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததுடன், கடற்படை போர்க்கப்பல்களின் கண்காணிப்பு மற்றும் ஈடுபாடு திறன்களை மேம்படுத்துவதற்காக பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து உபகரணங்களை வாங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலானது பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்த ராணுவ உபகரணங்களானது 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் நாட்டின் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் பாதுகாப்பு போன்றவற்றில் கவனம் செலுத்துவதற்காக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லைப்பிரச்சனையால் இந்திய ஆயுதப் படைகள் எல்லையில் குவிக்கப்பட்டிருக்கும் நேரத்தில் ராணுவ தளவாடங்கள் வாங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.