டெல்லி சட்டசபையில் நுழைய ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுக்கு தடையா..?

சட்டசபை வளாகத்தில் நுழைந்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
டெல்லி சட்டசபையில் நுழைய ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுக்கு தடையா..?
Published on

புதுடெல்லி,

டெல்லி முதல்-மந்திரி அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர் மற்றும் பகத் சிங்கின் புகைப்படங்கள் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் போராட்டம் நடத்தினர். எச்சரிக்கையை மீறியும் போராட்டம் தொடர்ந்ததால், எதிர்க்கட்சித் தலைவர் அதிஷி உள்பட 21 எம்.எல்.ஏ.க்களை 3 நாட்களுக்கு அவை நடவடிக்கைகளில் பங்கேற்பதில் இருந்து இடைநீக்கம் செய்து சட்டசபை தலைவர் விஜேந்தர் குப்தா உத்தரவிட்டார்.

இந்த நிலையில், இடைநீக்கம் முடிந்து ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் இன்று காலை சட்டசபைக்குள் நுழைய முயன்றபோது, சட்டசபை வளாகத்திலேயே அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதையடுத்து அதிஷி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதுதொடர்பாக அதிஷி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 'ஜெய் பீம்' என்ற கோஷங்களை எழுப்பியதற்காக சட்டசபையிலிருந்து 3 நாட்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர். இன்று சட்டசபைக்குள் நுழையக்கூட அனுமதிக்கப்படவில்லை. டெல்லி சட்டசபை வரலாற்றில் இதுபோன்று ஒருபோதும் நிகழ்ந்ததில்லை. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு "சர்வாதிகாரத்தின் அனைத்து வரம்புகளையும் மீறுகிறது". அம்பேத்கரை பாஜக வெறுக்கிறது, அவரது படத்தை வெறுக்கிறது, அவரது பெயரை வெறுக்கிறது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com