

புதுடெல்லி,
நாட்டின் தலைநகர் டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த மூன்று தினங்களாக போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்நிலையில், டெல்லியில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. இது வன்முறையாக மாறியது.
இதனால் டெல்லியில் கடந்த சில நாட்களாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது. 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். வன்முறையை கட்டுப்படுத்த வடகிழக்கு டெல்லி பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புதுடெல்லியில் வடகிழக்கே சந்த்பாக் பகுதியில் உளவு பிரிவை சேர்ந்த பணியாளர் அங்கித் சர்மா என்பவர் அவரது வீட்டின் அருகே இறந்த நிலையில் கிடந்துள்ளார். கல்வீச்சில் அவர் கொல்லப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து அவரது உடல் மீட்கப்பட்டு ஜி.டி.பி. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. இதனால் டெல்லி வன்முறைக்கு பலியானோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.