

புதுடெல்லி,
டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சி.ஏ.ஏ) ஆதரவாளர்கள்-எதிர்ப்பாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் காவலர் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். வன்முறையில் காயமடைந்த 150 பேர் டெல்லி ஜிடிபி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் காரணமாக டெல்லியில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. பல்வேறு பகுதிகளில் துணை ராணுவ படையினர், டெல்லி காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் டெல்லியில் மஜ்பூர், ஜாப்ராபாத், சந்த்பாக், கர்வால் நகர் ஆகிய இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜாமியா மில்லியா (ஏஏஜேஎம்) இஸ்லாமியாவின் பழைய மாணவர் சங்கத்தினர், மற்றும் ஜாமியா ஒருங்கிணைப்பு கமிட்டியைச் சேர்ந்தவர்கள் நள்ளிரவில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர்.
அப்போது டெல்லி கலவரத்தை தடுத்து நிறுத்தி அமைதியை நிலை நாட்டுவதற்கான நடவடிக்கை எடுக்ககோரியும், கலவரக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர். இதனிடையே தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவல், மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.