75-வது பிறந்தநாள்: ராஜீவ் காந்தி நினைவிடத்தில் சோனியா, ராகுல் மரியாதை

ராஜீவ் காந்தியின் 75-வது பிறந்தநாளையொட்டி, அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
75-வது பிறந்தநாள்: ராஜீவ் காந்தி நினைவிடத்தில் சோனியா, ராகுல் மரியாதை
Published on

புதுடெல்லி,

மன்மோகன் சிங், சோனியா

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, டெல்லியில் வீர்பூமியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அவருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

காங்கிரஸ் தலைவரும், ராஜீவ் காந்தியின் மனைவியுமான சோனியா காந்தி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராஜீவ் காந்தியின் மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா, மருமகன் ராபர்ட் வதேரா உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

மோடி

பிரதமர் நரேந்திர மோடி, தனது டுவிட்டர் பக்கத்தில் ராஜீவ் காந்திக்கு மரியாதை செலுத்தினார். அதில், நமது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு அவரது பிறந்தநாளை முன்னிட்டு மரியாதை செலுத்துகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்திலும் மரியாதை செலுத்தப்பட்டது. அதில், ராஜீவ் காந்தி பிறந்தநாளை கொண்டாடும் நேரத்தில், அவரது வார்த்தைகள் இப்போதும் பொருத்தமாக இருப்பதை மறக்கக்கூடாது. நம்மிடையே உள்ள ஒற்றுமை பிணைப்பை மதவாதம் உடைக்க அனுமதிக்கக்கூடாது. இந்தியாவின் பலமே அதன் ஒற்றுமையும், வேற்றுமையும்தான் என்று கூறப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி

ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் ராஜீவ் காந்தி சிறந்த தேச பக்தர். அவரது தொலைநோக்கு பார்வை கொண்ட கொள்கைகள், இந்தியாவை கட்டமைக்க உதவின. எனக்கு அவர் அன்பான தந்தை ஆவார். யாரையும் வெறுக்கக்கூடாது, அனைவரையும் நேசிக்க வேண்டும், மன்னிக்க வேண்டும் என்று அவர் கற்றுத்தந்தார் என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com