

புதுடெல்லி,
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததை தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். அதன் பின்னர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்ற நிலையில், ராகுல் காந்தியை மீண்டும் தலைவராக பொறுப்பேற்குமாறு கட்சி தொண்டர்கள் பலமுறை அழைப்பு விடுத்தும் அதனை ராகுல் காந்தி மறுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று டெல்லி காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் நடத்திய பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தியை மீண்டும் காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து டெல்லி காங்கிரசின் தலைவர் அனில் குமார் பேசுகையில், நாட்டின் குழப்பமான மற்றும் ஆபத்தான அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பார்க்கும் போது கட்சிக்கு ராகுல் காந்தியைப் போன்ற ஒரு ஆற்றல்மிக்க மற்றும் சக்திவாய்ந்த தலைவர் தேவை என்று தெரிவித்தார்.
மேலும் இந்த பொதுக்கூட்டத்தில் குடியரசு தினத்தன்று டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் நடந்த வன்முறையை தடுக்க தவறியதற்காக மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆகிய இருவரும் பொறுப்பேற்று பதவி விலக வலியுறுத்தி மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.