

புதுடெல்லி,
டெல்லி மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு புத்தகம், சீருடை வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டிருப்பது தொடர்பான வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு, பொறுப்பு தலைமை நீதிபதி மன்மோகன் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருப்பதால் இந்த விவகாரம் தொடர்பாக ஒப்புதல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி, நிர்வாக விஷயத்தில் முடிவெடுக்க வேண்டியது அரசின் கடமை என்றும், இது தொடர்பாக நீதிமன்றம் கருத்து தெரிவிக்க நேர்ந்தால் கடுமையான வார்த்தை பிரயோகங்களை உபயோகிக்க நேரிடும் என்றும் தெரிவித்தார்.
மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் நாட்டின் நலனை விட தனிப்பட்ட நலனுக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும், அதிகாரத்தில் மட்டுமே அவர் நாட்டம் கொண்டிருப்பதாகவும் நீதிபதி விமர்சித்தார்.