

புதுடெல்லி,
டெல்லியின் பதர்பூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு மத்திய அரசுக்கு சொந்தமான சப்தர்ஜங் மருத்துவமனையில் நேற்று காலையில் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை மூச்சு விடவோ, அதன் உடலில் அசைவுகள் எதுவுமோ இல்லாததால், அது இறந்து விட்டதாக கூறி அதை ஒரு பையில் போட்டு சீல் வைத்து அதன் தந்தையான ரோகித்திடம் கொடுத்து விட்டனர்.
குழந்தையின் தாயின் உடல்நிலை மோசமடைந்து உள்ளதால் அவர் தொடர்ந்து மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டு உள்ளார். குழந்தையை பெற்றுக்கொண்ட ரோகித், வீட்டுக்கு கொண்டு சென்று இறுதிச்சடங்குகளை தொடங்கினார். அப்போது திடீரென குழந்தை இருந்த பை அசைவதை ரோகித்தின் சகோதரி கண்டார்.
உடனே அதை பிரித்து பார்த்த போது குழந்தை மூச்சு விட்டதுடன், அது கை, கால்களை அசைப்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அருகில் உள்ள மற்றொரு மருத்துவமனையில் குழந்தையை சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் சப்தர்ஜங் மருத்துவமனை டாக்டர்களின் அலட்சியம் தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து சப்தர்ஜங் மருத்துவமனையும், விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது.