டெல்லி போராட்டம்: விவசாயிகளுக்கு ஆதரவாக மராட்டியத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பேரணி

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக மராட்டியத்தில் நாசிக் நகரில் இருந்து மும்பை நோக்கி ஆயிரக்கணக்கான விவசாயிகள் பேரணியாக புறப்பட்டு சென்றனர்.
டெல்லி போராட்டம்: விவசாயிகளுக்கு ஆதரவாக மராட்டியத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பேரணி
Published on

நாசிக்,

டெல்லி எல்லையில், பஞ்சாப் மற்றும் அரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகள், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி கடந்த நவம்பர் 26ந்தேதியில் இருந்து கடும் குளிரிலும் தீவிர போராட்டம் நடத்தி வருகின்றனர். எனினும், வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே உறுதியான எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இந்த சூழலில், இரு தரப்பினருக்கும் இடையே கடந்த 21ந்தேதி 10-வது சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. அதில், வேளாண் சட்டங்களை 18 மாதங்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும், சுமுக தீர்வு காண ஒரு கூட்டுக்குழுவை அமைப்பதாகவும் ஒரு திட்டத்தை மத்திய அரசு முன்வைத்தது.

18 மாதங்களுக்கு வேளாண் சட்டங்களை அமல்படுத்தாமல் நிறுத்தி வைக்க மத்திய அரசு ஒப்பு கொண்ட போதும் அவற்றை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் வேளாண் சட்டங்கள் தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசுக்கும், விவசாயிகள் சங்கத்தினருக்கும் இடையே நேற்று முன்தினம் நடந்த 11-வது சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

விவசாயிகள் குடியரசு தினத்தன்று நாங்கள் டிராக்டர் பேரணியை நடத்துவோம் என தொடர்ந்து கூறி வந்தனர். இதற்கு அனுமதி வழங்குவதற்கு டெல்லி போலீசாருக்கே அதிகாரம் உள்ளது என சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்துவதுபற்றி ஸ்வராஜ் இந்தியா அமைப்பினை சேர்ந்த யோகேந்திர யாதவ் நேற்று கூறும்பொழுது, வருகிற 26ந்தேதி குடியரசு தினத்தில் விவசாயிகளின் டிராக்டர் பேரணி நடத்தப்படும்.

இதற்காக தடுப்பான்கள் திறக்கப்பட்டு நாங்கள் டெல்லிக்குள் நுழைவோம். விவசாயிகள் மற்றும் டெல்லி போலீசார் இடையே ஒப்பந்தம் ஒன்று முடிவாகி உள்ளது. இதுபற்றிய இறுதி விவரங்கள் இரவுக்குள் (நேற்று) முடிவு செய்யப்படும் என கூறினார்.

அமைதியாக பேரணியை நடத்துவோம். அது, குடியரசு தின அணிவகுப்புக்கோ அல்லது பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கோ எந்தவித பாதிப்பினையும் ஏற்படுத்திடாது என்றும் அவர் கூறினார்.

இதேபோன்று, பாரதீய கிசான் யூனியன் அமைப்பின் குர்னாம் சிங் சாதுனி செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, குழு வழங்கிய அறிவுறுத்தலை பின்பற்றி பேரணியில் கலந்து கொள்ளும் விவசாயிகள் கண்ணியம் காக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன் என கூறினார்.

இந்நிலையில், டெல்லி போலீசார் இதுபற்றி நேற்று கூறும்பொழுது, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி எந்தெந்த வழியே நடத்தப்படும் என்பது பற்றி எழுத்து வடிவில் எதுவும் அளிக்கவில்லை.

வருகிற 26ந்தேதி நடத்தப்படும் டிராக்டர் பேரணி எந்தெந்த வழியாக செல்லும் என்பது பற்றி விவசாயிகள் எழுத்து வடிவில் எங்களுக்கு விவரம் அளித்த பின்னரே நாங்கள் அதனை ஆய்வு செய்து அதன்பின்னர் ஒரு முடிவுக்கு வருவோம் என கூறினர்.

இந்த சூழலில், பஞ்சாப் விவசாய சங்க கமிட்டியை சேர்ந்த சத்னம் சிங் பன்னு என்பவர் சிங்கு எல்லையில் செய்தியாளர்களிடம் இன்று அளித்த பேட்டியில், குடியரசு தினத்தில் டிராக்டர் பேரணியில் கலந்து கொள்ள திரளான விவசாயிகள் டெல்லிக்கு வருகின்றனர்.

டெல்லி போலீசார் அனுமதி கொடுக்கிறார்களா அல்லது இல்லையா? என்பதெல்லாம் விசயமில்லை. நாங்கள் டெல்லியின் வெளிவட்ட சாலையில் பேரணியை நடத்த இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக மராட்டியத்தில், அகில இந்திய விவசாயிகள் சங்கம் பெயரிலான பேனர்களை சுமந்து கொண்டு நாசிக் நகரில் இருந்து மும்பை நோக்கி விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் பேரணியாக புறப்பட்டு சென்றனர். அவர்கள் கசாரா மலை தொடர் வழியே கொடிகளை ஏந்தியபடி, கோஷங்களை எழுப்பியபடி ஊர்வலம் சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com