கணவருடன் தகாத உறவு...! தங்கையின் முகத்தில் துப்பாக்கியால் சுட்ட அக்காள்...!

சோனு மீது கொலை முயற்சி மற்றும் ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கணவருடன் தகாத உறவு...! தங்கையின் முகத்தில் துப்பாக்கியால் சுட்ட அக்காள்...!
Published on

புதுடெல்லி,

டெல்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ளது சாஸ்திரி பூங்கா பகுதி. இங்குள்ள புலாந்த் மஸ்ஜித் அருகில் சகோதரிகளான சோனு (30) மற்றும் அவர் தங்கை சுமைலா வசித்து வந்தனர்.

சோனுவிற்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். தன் கணவருக்கும் தன் தங்கை சுமைலாவிற்கும் தவறான உறவிருப்பதாக சோனு சந்தேகம் அடைந்திருக்கிறார்.

இந்த பிரச்சனை தொடர்பாக சகோதரிகள் இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை மீண்டும் இது தொடர்பான வாக்குவாதம் நடைபெற்றது.

அப்போது ஆத்திரமடைந்த சோனு துப்பாக்கியால் தனது தங்கை சுமைலாவை முகத்திலேயே சுட்டார். துப்பாக்கி குண்டு சுமைலாவின் முகத்தில் தாக்கியும் ஆத்திரம் அடங்காத சோனு, அத்துப்பாக்கியின் பின்புறத்தால் சுமைலாவின் முகத்தில் பலமாக தாக்கினார்.

இதனையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து, காயமடைந்த சுமைலாவை மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். இதனையடுத்து விரைந்து வந்த சாஸ்திரி பூங்கா காவல்துறையினர் சோனுவை கைது செய்தனர்.

சோனு மீது கொலை முயற்சி மற்றும் ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சோனுவிற்கு துப்பாக்கி எவ்வாறு கிடைத்தது? என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com