

புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் பல மாதங்களாக காற்று மாசு அதிகரிப்பது பெரும் பிரச்சினையாக நிலவுகிறது. வாகன நெரிசல் காரணமாகவும், அண்டை மாநிலங்களில் விவசாயிகள் பயிர் கழிவுகளை எரிப்பதாலும் டெல்லியில் காற்றின் தரம் சுவாசிக்க முடியாத அளவிலேயே இருந்து வருகிறது.
இதற்கிடையில், காற்று மாசை கருத்தில் கொண்டு தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிக்க டெல்லி அரசு தடை விதித்திருந்தது. ஆனால், தீபாவளி பண்டிகையின் போது டெல்லியின் பல்வேறு பகுதிகளில் தடையை மீறி பட்டாசு வெடிக்கப்பட்டது. இதனால் டெல்லியில் காற்று மாசு மேலும் அதிகரித்ததாக கூறப்படுகிறது.
இன்று டெல்லியில் நகர் முழுவதும் புகைமூட்டமாக காட்சியளிக்கிறது. பகல் வேளைகளிலேயே சாலையில் வாகன ஓட்டிகள் விளக்குகளை எரியவிட்டபடி செல்லும் நிலை உள்ளது. இந்த நிலையில், காற்றின் தரம் இன்று சற்று மேம்பட்டது. காலை நிலவரப்படி கற்று தரக் குறியீடு 338- ஆக பதிவானது. இதன் மூலம் மிக மோசம் என்ற நிலையில், இருந்து மோசம் என்ற நிலைக்கு வந்துள்ளது.
டெல்லியில் காற்று மாசை கருத்தில் கொண்டு, ஒருவாரத்திற்கு பள்ளிகள் மூடப்படுவதாக கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். அதேபோல், கட்டுமானப்பணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி அரசின் இந்த நடவடிக்கைகளால் காற்றின் தரம் இன்னும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.