

கான்பூர்,
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் தொடர்பாக தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து தேசிய புலனாய்வு பிரிவு மற்றும் உ.பி. மாநில போலீஸ் திடீர் சோதனையில் ஈடுபட்டது. கான்பூர் குடியிருப்பு பகுதியில் நடத்தப்பட்ட இந்த அதிரடி சோதனையில் ரூ. 100 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக சிலரை பிடித்து விசாரித்து வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அரசு அதிகாரி பேசுகையில், கான்பூரில் குடியிருப்பு பகுதியில் பழைய ரூபாய் நோட்டுக்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஆர்பிஐ மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவுடன் சோதனை நடத்தப்பட்டது, என்று கூறினார்.
இதில் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்து வருகிறோம் என போலீஸ் கண்காணிப்பாளர் ஏகே மீனா பேசிஉள்ளார்.
கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக நாட்டில் புழக்கத்தில் இருந்த உயர் மதிப்புடைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. 1,716.5 கோடி 500 ரூபாய் நோட்டுக்கள், 685.8 கோடி 1000 நோட்டுக்கள் என ரூ. 15.44 லட்சம் கோடி மதிப்பிலான பணம் மதிப்பிழப்பு செய்யப்பட்டது. மத்திய ரிசர்வ் வங்கி 2016-17-ம் ஆண்டுக்கான ஆண்டறிகையை வெளியிட்ட போது மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளில் 99 சதவிதம் அதாவது ரூ. 15.28 லட்சம் கோடி வங்கிக்கு வந்துவிட்டது என தெரிவித்தது.