அவதூறான பதிவு: நடிகர் விநாயகன் மீது டி.ஜி.பி.யிடம் புகார்

விநாயகனை கைது செய்ய வலியுறுத்தி மாநில டி.ஜி.பி.யிடம் இளைஞர் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
Derogatory post: Complaint filed against Vinayakan
Published on

கொச்சி,

கேரள முன்னாள் முதல்- மந்திரி வி.எஸ். அச்சுதானந்தன் உள்பட மறைந்த தலைவர்களை அவமதித்ததற்காக நடிகர் விநாயகனை கைது செய்ய வலியுறுத்தி மாநில டி.ஜி.பி.யிடம் இளைஞர் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மண் சாண்டி மரணம் அடைந்த போது, அவரது ஊர்வலம் சுமார் 24 மணி நேரத்திற்கும் மேலாக நடந்தது. இதற்கு நடிகர் விநாயகன், 'எனது தந்தையும் செத்தார், உம்மன் சாண்டியும் செத்தார்' என்று தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார். இதற்கு எதிராக கண்டன குரல் எழும்பியநிலையில், அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

இதற்கிடையில், கடந்த 21-ந் தேதி முன்னாள் முதல்-மந்திரி வி.எஸ். அச்சுதானந்தனின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நேற்று முன்தினம் எர்ணாகுளத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகர் விநாயகன், 'இறக்கவில்லை... இறக்கவில்லை... எனது தலைவர் வி.எஸ் அச்சுதானந்தன் இறக்கவில்லை.... எங்களுடனேயே வாழ்கிறார்' என கையை உயர்த்திய படி ஆதரவு கோஷத்தை முழக்கினார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானநிலையில், உம்மன் சாண்டிக்கு எதிராக அவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட கருத்தை முன் வைத்து பல்வேறு தரப்பினரும் நடிகர் விநாயகனுக்கு எதிராக கடும்  கண்டனங்களை பதிவிட்டனர்.

இதற்கிடையில், நடிகர் விநாயகன் தனது முகநூல் பக்கத்தில் 'எனது தந்தையும் செத்தார், வி.எஸ். அச்சுதானந்தனும் செத்தார், காந்தியும் செத்தார், நேருவும் செத்தார், இந்திராவும் செத்தார், ராஜீவ் காந்தியும் செத்தார், கருணாகரனும் செத்தார்' என்றும் சில அவதூறான கருத்தையும் கூறியுள்ளார்.

இது தொண்டர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியநிலையில், விநாயகனை கைது செய்ய வலியுறுத்தி மாநில டி.ஜி.பி.யிடம் இளைஞர் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com