

பயங்கரவாதத்தை தூண்டியதாகவும், கருப்பு பண மோசடியில் ஈடுபட்டதாகவும் பல்வேறு பிரிவுகளின் கீழ் பிரபல இஸ்லாமிய மத போதகர் ஜாகீர் நாயக்கின் மீது தேசிய புலனாய்வு பிரிவு வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறது. 2016 டாக்கா தாக்குதலை அடுத்து வங்காளதேச அரசாங்கம், ஜாகீர் நாயக்கின் பேச்சுக்களை ஒளிபரப்பும் பீஸ் தொலைக்காட்சி மற்றும் ஜாகீர் நாயக்கின் வீடியோ உரைகள், இஸ்லாமிய அப்ளிகேஷன், வால் பேப்பர்கள் அடங்கிய பீஸ் செல்போன்களை (உலகின் ஒரே அதிகாரபூர்வ இஸ்லாமிய ஆண்ட்ராய்டு போன்) தடை செய்தது. அத்துடன், இந்தியாவை சேர்ந்த ஜாகிர் நாயக் பற்றி இந்திய அரசாங்கம் விசாரிக்கவும் கண்காணிக்கவும் வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.
இதனையடுத்து இந்தியாவிலும் டிவியை ஒளிபரப்புச் செய்ய தடை விதிக்கப்பட்டது. ஆனால் ஒருவருடத்திற்கு மேலாக இந்த டிவியில் வரும் நிகழ்ச்சிகள் பீஸ் ஆண்ட்ராய்டு செயலி மூலமாக உலக அளவில் மில்லியன் கணக்கானோரை சென்றடைந்துள்ளது. இலங்கை, வங்காளதேசம் மற்றும் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள போதும் பீஸ் செயலி கூகுள் ப்ளேயில் 3+ ரேட்டிங்கை கொண்டுள்ளது. ஆப் செயலி பயன்பாட்டின் மூலம் நாயக்கின் தொலைக்காட்சி சேனல் தடையில்லா 24x7 நேரடி ஒளிபரப்பு இந்தியா முழுவதும் கிடைக்கிறது.
சீன, பெங்கால், ஆங்கிலம் மற்றும் உருது மொழிகளில் இச்சேவை வழங்கப்படுகிறது. இந்தியாவில் தலைமறைவானவர் என அறிவிக்கப்பட்டுள்ள ஜாகீர் நாயக்கை பிடிக்க இன்டர்போல் உதவி நாடப்பட்டுள்ளது. இப்போது மலேசியாவில் இருக்கும் ஜாகீர் நாயக்கிற்கு எதிராக மத வெறுப்பை தூண்டியதாக விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. ஜாகீர் நாயக்கை இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவது தொடர்பாக மலேசிய அமைச்சரவையில் பிளவு காணப்படும் நிலையில், மலேசியாவில் அவர் மதபிரசாரம் செய்வதற்கு காவல்துறை தடை விதித்துள்ளது.