

திருப்பதி,
தமிழகம், ஆந்திராவில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. திருமலையில் எங்குப்பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.
நாராயணகிரி தோட்டத்தில் உள்ள ஜெர்மன் செட் கொட்டகைகளில் பக்தர்கள் நிரம்பினர். வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 31 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பி 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பாதகங்கையம்மன் கோவில் வரை நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
தரிசன வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள் இடைவிடாமல் குடிநீர், டீ, காபி, அன்னப்பிரசாதம் வழங்கினர். நேற்று தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட 'டைம் ஸ்லாட்' டோக்கன்கள் இல்லாமல் இலவச தரிசனத்தில் சென்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 24 மணிநேரம் ஆனதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.