

புதுடெல்லி,
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் கடந்த ஆண்டு டிசம்பர் 17 முதல் 19 வரை தர்ம சன்சத் என்ற பெயரில் மத கூட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற இந்து மதத்தை சேர்ந்த சில சாமியார்கள் வெறுப்புணர்வை தூண்டும் வகையிலான பரப்புரையில் ஈடுபட்டனர்.
குறிப்பாக, சிறுபான்மையினராக உள்ள இஸ்லாமிய மதத்தினரை இனப்படுகொலை செய்யவேண்டும் என கூறி வெறுப்புணர்வு பேச்சில் ஈடுபட்டனர். இந்த பேச்சு தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, ஹரித்வார் தர்ம சன்சத் நிகழ்ச்சி தொடர்பாக உத்தரகாண்ட் அரசு சிறப்பு போலீஸ் புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட்டது. இந்த குழு வழக்குப்பதிவு செய்து தனது விசாரணையை தொடங்கி நடத்தி வருகிறது.
இந்நிலையில், ஹரித்வாரில் நடைபெற்ற வெறுப்புணர்வு தூண்டும் வகையிலான மத கூட்டம் தொடர்பாக சிறப்பு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத்தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணை வர உள்ளது.
இந்த விசாராணையின் போது ஹரித்வார் மத கூட்டத்தில் நடைபெற்ற வெறுப்புணர்வு பரப்புரை தொடர்பாக விசாரிக்க சிறப்பு விசாரணை ஆணையத்தை சுப்ரீம் கோர்ட்டு அமைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.