

நிரவ் மோடி உறவினர்
மும்பையை தலைமையிடமாக கொண்டு, கீதாஞ்சலி என்ற வைர விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வந்தவர் மெகுல் சோக்சி (வயது 62). இவரும், இவருடைய உறவினர் நிரவ் மோடியும் சேர்ந்து, பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் முறைகேடாக பெறப்பட்ட கடன் உத்தரவாத கடிதங்களை பயன்படுத்தி ரூ.13 ஆயிரத்து 500 கோடி கடன் பெற்று மோசடி செய்தனர். இந்த மோசடி அம்பலமானவுடன், நிரவ் மோடி லண்டனுக்கு தப்பிச் சென்றார். அங்கு கைது செய்யப்பட்ட அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.அதுபோல், மெகுல் சோக்சி, 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம், கரீபியன் தீவு நாடான ஆன்டிகுவாவுக்கு தப்பிச்சென்றார். அந்நாட்டின் குடியுரிமையையும் பெற்றுள்ளார். அவரை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு சி.பி.ஐ. கோரி வருகிறது.
காணவில்லை
இந்தநிலையில், ஆன்டிகுவா நாட்டில் மெகுல் சோக்சி மாயமாகி விட்டதாக தெரிய வந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் அவர் வீட்டில் இருந்து காரில் புறப்பட்டார். அதன்பிறகு வீடு திரும்பவில்லை.ஆன்டிகுவா போலீசார், தேடுதல் வேட்டைக்கு பிறகு காரை மட்டும் கண்டுபிடித்து மீட்டனர். மெகுல் சோக்சியை கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால், அவர் காணாமல் போய்விட்டதாக அறிவித்து, அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.மெகுல் சோக்சி பற்றி தகவல் அளிக்குமாறு அவரது புகைப்படத்துடன் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். சோக்சியின் வக்கீல் விஜய் அகர்வாலும் இத்தகவலை உறுதி செய்துள்ளார்.
கியூபா சென்றாரா?
மெகுல் சோக்சி கியூபா நாட்டுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அங்கு அவருக்கு ஒரு சொகுசு பங்களா உள்ளது. அதில் அவர் பொழுதை போக்கி வருவதாக அவருடைய கூட்டாளி ஒருவர் தெரிவித்தார்.
சோக்சி மாயமானது குறித்து டெல்லியில் உள்ள ஆன்டிகுவா தூதரகத்திடம் சி.பி.ஐ. தகவல் கேட்டுள்ளது.