

புதுடெல்லி,
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கடந்த மாதம் டுவிட்டர் நிறுவனத்துக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், மாதந்தோறும் தன்னை புதிதாக பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை சரிந்து வருவதாகவும், இதை ஆய்வு செய்யுமாறும் அவர் கூறியிருந்தார்.
இந்தநிலையில், நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாட்டேவிடம் இதுபற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர், சமூக வலைத்தளங்கள், மக்கள் தொடர்புக்கான மாற்று வழிகள் என்பதால், அவற்றை வலுக்கட்டாயமாக நசுக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. காங்கிரஸ் தலைவர்களின், குறிப்பாக ராகுல்காந்தியின் வீச்சை கட்டுப்படுத்துவதற்காக கணக்குகளை தன்னிச்சையாக முடக்கவும், நிறுத்தி வைக்கவும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுக்கிறது. இதை அதிருப்தியை கட்டுப்படுத்தும் முயற்சியாக பார்க்கிறோம். பேச்சு சுதந்திரத்தை முடக்கினால், அதற்கு சமூக வலைத்தளங்கள் பொறுப்பேற்க செய்யப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.