சர்வாதிகாரம்; 4 பேரால் நாடு நாசம்... சாடிய ராகுல் காந்தி

4 பேரின் சர்வாதிகாரத்தினால், நாடு நாசமடைவதற்கான எந்த ஒரு விசயமும் விட்டு வைக்கப்படவில்லை என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
சர்வாதிகாரம்; 4 பேரால் நாடு நாசம்... சாடிய ராகுல் காந்தி
Published on

புதுடெல்லி,

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்க்க மத்திய பல்கலைக்கழக பொது நுழைவு தேர்வு எனப்படும் (க்யூட்) தேர்வை மத்திய அரசு நடத்துகிறது.

நடப்பு கல்வி ஆண்டுக்கான இளங்கலை படிப்புக்கான க்யூட் தேர்வு நடந்து வருகிறது. நேற்று முன்தினம் காலையிலும், மாலையிலும் 2 ஷிப்டுகளாக தேர்வு நடந்தது. தொழில்நுட்ப மற்றும் நிர்வாக குளறுபடிகளால் 17 மாநிலங்களில் சில மையங்களில் முதல் ஷிப்ட் தேர்வு 12-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. மாலையில் நடக்க இருந்த தேர்வு, மொத்தம் உள்ள 489 மையங்களிலும் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், நேற்று 2-வது நாளாக தொழில்நுட்ப குளறுபடியால் தேர்வு பாதிக்கப்பட்டது. ஆனால், காலையில் 95 சதவீத மையங்களில் தேர்வு சுமுகமாக நடந்ததாக தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது. எனினும், நாடு முழுவதும் மத்திய பல்கலைக்கழக பொது நுழைவு தேர்வானது 2வது நாளாக 50 மையங்களில் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

இதனை குறிப்பிட்டு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அரசை தாக்கி பேசியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், அமிர்த காலத்தின் புதிய கல்வி கொள்கை: தேர்வு நடைபெறுவதற்கு முன் தேர்வு பற்றிய விவாதம் நடைபெறுகிறது. தேர்வின்போது காகிதம் இல்லை, விவாதமும் இல்லை. தேர்வுக்கு பின் அவர்களது எதிர்காலம் இருளில் என தெரிவித்து உள்ளார்.

மத்திய பல்கலைக்கழக பொது நுழைவு தேர்வு மாணவர்களுக்கு என்ன நடக்கிறது என்பது, இன்றைய நாட்டின் ஒவ்வொரு இளைஞனின் கதை என அவர் இந்தியில் தெரிவித்து உள்ளார்.

4 பேரின் சர்வாதிகாரத்தினால், நாடு நாசமடைவதற்கான எந்த ஒரு விசயமும் விட்டு வைக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்து உள்ளார். எனினும், அந்த 4 பேர் யார் என அவர் குறிப்பிடவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com