ப.சிதம்பரம்-சசிதரூர் இடையே கருத்து முரண்பாடு- காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு

பிரிக்ஸ் மாநாடு குறித்து காங்கிரஸ் தலைவர்கள் ப.சிதம்பரம், சசிதரூர் ஆகியோரது முரண்பட்ட கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ப.சிதம்பரம்-சசிதரூர் இடையே கருத்து முரண்பாடு- காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு
Published on

புதுடெல்லி,

இந்தியாவின் தலைமையில் 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாடு டெல்லியில் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதில் ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட பிரிக்ஸ் அமைப்பின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.இந்த நிலையில் இந்த மாநாடு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்திருந்தார். இதுபற்றி அவர் கூறுகையில், "பிரிக்ஸ் மாநாட்டுக்கு எத்தனை அதிபர்கள் மற்றும் எத்தனை பிரதமர்கள் வருகிறார்கள்? என்று எனக்குத் தெரியாது.

என்ன நன்மைகள்

ஆனால் கடந்த 3 பிரிக்ஸ் உச்சிமாநாடுகள் உறுதியான நன்மைகளையோ அல்லது தெளிவான முடிவுகளையோ ஏற்படுத்தியதாக நான் நினைக்கவில்லை. நாம் பிரிக்ஸ், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, ஜி20 மற்றும் குவாட் அமைப்புகளில் அங்கம் வகிக்கிறோம். அதனால் நமக்கு என்ன நன்மைகள் கிடைக்கின்றன? என்று எனக்குத் தெரியவில்லை. எந்த நன்மைகளையும் நான் காணவில்லை. ஆனால் முன்பு, சில பிரிக்ஸ் உச்சிமாநாடுகள் சில உறுதியான நன்மைகளை அளித்தன” என்றார்.

எதிர்ப்பு

இவரது இந்த கருத்துக்கு பா.ஜனதா தலைவர்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தனர். இதற்கிடையே காங்கிரசின் மற்றொரு தலைவர் சசிதரூரின் கருத்தும், ப.சிதம்பரம் கருத்துக்கு எதிராக அமைந்துள்ளது.சசிதரூர் கூறுகையில், "பிரிக்ஸ் மாநாட்டில் பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பினர்கள் மட்டுமல்லாமல், அதிபர் மற்றும் பிரதமர் மட்டத்திலான சில பார்வையாளர்கள் உள்பட 12 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்வது நமக்கு பெரிய கவுரவம் ஆகும். அது ஒரு குறிப்பிட்ட ராஜதந்திர ஒன்றிணைக்கும் ஆற்றலைக் காட்டுகிறது.

இது உலக அரங்கில் தனக்குத் தானே ஒரு மதிப்பைக் கொண்டுள்ளது" என்றார்.மேலும், "11 பிரிக்ஸ் நாடுகளின் குழுவானது. உலகின் பெரும்பான்மையான மக்கள்தொகையையும், உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 41 சதவீதத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது” என்று பிரிக்சின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். அத்துடன், இந்த கூட்டமைப்பு எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் பேசினார். குறிப்பாக அமெரிக்காவின் 100 சதவீத வரி பற்றியும் பேசினார். நாடுகளிடையே அழுத்தமான உலகளாவிய பிரச்சினைகள் குறித்து ஒருமித்த கருத்தை எட்டுவதில் உள்ள சிரமத்தையும் சுட்டிக்காட்டினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com