

திருவனந்தபுரம்,
தொழில்நுட்ப கல்வியில் மேலும் ஒரு படி முன்னே செல்லும் வகையில் நாட்டிலேயே முதல் முறையாக டிஜிட்டல் பல்கலைக்கழகத்தை உருவாக்கி கேரளா சாதனை படைத்திருக்கிறது. தலைநகர் திருவனந்தபுரம் அருகே உள்ள மங்கலாபுரத்தில் இயங்கி வரும் ஐ.ஐ.டி.யை மேம்படுத்தி டிஜிட்டல் பல்கலைக்கழகமாக உருவாக்கி உள்ளது.
இந்த பல்கலைக்கழக திறப்பு விழா நேற்று காணொலி காட்சி வழியாக நடந்தது. நிகழ்ச்சிக்கு முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமை தாங்க, பல்கலைக்கழக வேந்தரும், கவர்னருமான ஆரிப் முகமது கான் பல்கலைக்கழக கல்வெட்டை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய கவர்னர், டிஜிட்டல் பல்கலைக்கழகம் உருவாக்குவதற்கு மாநில அரசு மேற்கொண்ட முயற்சிகளை பாராட்டினார்.
இளைஞர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்புகளை வழங்குவதற்காக டிஜிட்டல் பல்கலைக்கழகம் திறந்திருப்பதாக முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறினார். சமூகத்தில் டிஜிட்டல் பிரிவினை இருக்கக்கூடாது எனக்கூறிய அவர், பல்வேறு துறைகளில் டிஜிட்டல் சிறப்பை அடைவதற்கான முயற்சிகளில் மாநில அரசு ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நாட்டிலேயே முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ள இந்த டிஜிட்டல் பல்கலைக்கழகத்தில் டிஜிட்டல் அறிவியல், எலக்ட்ரானிக் சிஸ்டம் மற்றும் ஆட்டோமேஷன் உள்ளிட்ட 5 துறைகள் உருவாக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு துறையும் பட்ட மேற்படிப்பு வரையிலான கல்வியை வழங்கும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.