இளைஞர்களின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது; ராகுல்காந்தி


இளைஞர்களின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது; ராகுல்காந்தி
x
தினத்தந்தி 24 Sept 2025 6:32 AM IST (Updated: 24 Sept 2025 6:45 AM IST)
t-max-icont-min-icon

இளம்தலைமுறை இனிமேலும் சகித்துக்கொள்ளாது என்று ராகுல் காந்தி கூறினார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது ‘எக்ஸ்’ வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

வேலையில்லா திண்டாட்டம்தான், இளைஞர்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சினை. அது, வாக்கு திருட்டுடன் நேரடி தொடர்பு கொண்டது.அதாவது, ஒரு அரசாங்கம் மக்களின் நம்பிக்கையை பெற்று ஆட்சிக்கு வரும்போது, அதன் முதல் பணி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதுதான். ஆனால், பா.ஜனதா, தேர்தலில் நேர்மையாக வெற்றி பெறவில்லை. அமைப்புகளை கட்டுப்பாட்டில் வைத்தும், வாக்குகளை திருடியும் அவர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள்.

அதனால்தான் வேலையில்லா திண்டாட்டம், 45 ஆண்டுகள் காணாத அளவுக்கு உயர்ந்து விட்டது. வேலைவாய்ப்புகள் சரிந்து விட்டன. ஆள்தேர்வு நடைமுறை சீர்குலைந்து விட்டது. இளைஞர்களின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது. ஒவ்வொரு போட்டித்தேர்வின் வினாத்தாளும் கசிந்து விடுகிறது. ஆள்தேர்வு பணி, ஊழலில் சிக்கித்தவிக்கிறது. நாட்டின் இளைஞர்கள் கடினமாக உழைக்கிறார்கள், தங்கள் எதிர்காலத்துக்காக போராடுகிறார்கள். ஆனால், பிரதமர் மோடி, தன்னை விளம்பரப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறார்.

பிரபலங்களை வைத்து பாராட்ட வைக்கிறார். கோடீசுவரர்கள் லாபம் சம்பாதிக்க உதவுகிறார். இளைஞர்களின் நம்பிக்கையை உடைத்து, அவர்களை விரக்தியில் தள்ளுவதுதான் அரசின் அடையாளமாகி விட்டது.தற்போது நிலைமை மாறி வருகிறது. உண்மையான போராட்டம், வேலைவாய்ப்புக்கு மட்டுமின்றி, வாக்கு திருட்டுக்கு எதிராகவும்தான் என்பதை இளைஞர்கள் புரிந்து கொண்டுள்ளனர். ஏனென்றால், தேர்தல்கள் திருடப்படுவது நீடிக்கும்வரை வேலையில்லா திண்டாட்டமும், ஊழலும் உயர்ந்தபடியே இருக்கும்.வேலைவாய்ப்பு திருட்டையும், வாக்கு திருட்டையும் இளம்தலைமுறை இனிமேலும் சகித்துக்கொள்ளாது. மேற்கண்டவற்றில் இருந்து இந்தியாவை விடுவிப்பதுதான் உச்சக்கட்ட தேசபக்தி.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

1 More update

Next Story