

புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக விமான நிலையங்களில் கொரோனா விதிகளை மீறுவோரிடம் உடனடியாக அபராதம் வசூலிக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக, இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் சார்பில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது;-
பல்வேறு விமான நிலையங்களை ஆய்வு செய்தபோது, கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைச் சரியாகப் பின்பற்றவில்லை என்பது தெரியவந்தது. ஆதலால், அனைத்துப் பயணிகளும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை விமான நிலையங்கள், விமான நிறுவனங்கள் உறுதிசெய்ய வேண்டும்.
முக கவசத்தை அணிவதையும், சமூக இடைவெளியை கடைப்பிடித்து நடப்பதையும் கண்காணிக்க வேண்டும். முக கவசம் அணியாத பயணிகள், முக கவசத்தை முறையாக அணியாத பயணிகளிடம் போலீசார் உதவியுடன், விமான நிலைய அதிகாரிகள் உடனடி அபராதம் வசூலிக்கலாம் என தெரிவித்துள்ளது.