

புதுடெல்லி,
அமெரிக்கா தனது நாட்டின் மருந்துத் தேவைகளுக்கு, குறிப்பாக மலிவு விலை ஜெனரிக் மருந்துகளுக்கு, பெருமளவில் வெளிநாடுகளையே நம்பியுள்ளது. உலகின் மிகப்பெரிய மருந்து சந்தையான அமெரிக்காவுக்கு இந்தியாதான் முதன்மை வினியோகஸ்தராக உள்ளது. அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு 3 மாத்திரைகளில் 1 மாத்திரை இந்தியாவால் தயாரிக்கப்படுகிறது.
அதாவது அமெரிக்காவின் மொத்த ஜெனரிக் மருந்து தேவையில் 47 சதவீதம் வரை இந்தியா மட்டுமே பூர்த்தி செய்கிறது. அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் உற்பத்திச் செலவு 70 சதவீதம் குறைவு என்பதால், அமெரிக்காவிற்கு இது மிகவும் லாபகரமானதாக இருந்து வருகிறது. இந்திய மருந்து நிறுவனங்கள் அமெரிக்க சந்தை மூலம் தங்களின் மொத்த வருவாயில் 40 சதவீதம்வரை ஈட்டுகின்றன.
அமெரிக்காவில் இறக்குமதியாகும் ஜெனரிக் மருந்துகளுக்கு 200 சதவீதம் வரிவிதித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். உள்நாட்டில் மருந்து உற்பத்தியை அதிகரிக்க வும், பிற நாடுகளிலிருந்து இறக்குமதி அளவைக் குறைக்கவும் டிரம்ப் புதிய காலக்கெடுவுடன் கூடிய வரி திட்டத்தை அறிவித்துள்ளார். அதாவது வருகிற ஆகஸ்டு 1-ந்தேதி தொடங்கி அடுத்த 2 ஆண்டுகளுக்கு (2028) மருந்து இறக்குமதிக்கான வரியை பூஜ்ஜியமாக குறைத்துள்ளார்.
தொடர்ந்து அடுத்த ஓராண்டுக்கு 100 சதவீதம் வரியும், ஆகஸ்டு 2029-ம் ஆண்டு முதல் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் மருந்துகளுக்கு 200 சதவீதம் வரிவிதித்து உத்தரவிட்டுள்ளார். இதுகு றித்து டிரம்ப் வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில், “அமெரிக்காவில் சொந்தமாக உற்பத்தி ஆலைகளை அமைக்காத மருந்து நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கும் நோக்கிலேயே இந்த வரி உயர்வு கொண்டுவரப்படுகிறது. இது அமெரிக்கப் பொருளாதாரத்தையும் மக்களின் சுகாதாரப் பாதுகாப்பையும் மேம்படுத்தும்." என தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு சர்வதேச வர்த்தக கூட்டாளிகள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்திய நிறுவனங்களுக்கு இந்த அறிவிப்பு பேரிடியாக அமைந்தது. இந்த வரி விதிப்பால் அமெரிக்காவில் ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் புற்றுநோய்க்கான அத்தியாவசிய மருந்துகளின் விலைகள் கணிசமாக உயரக்கூடும் அல்லது பற்றாக்குறை ஏற்படலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.