திவிஷா சர்மா மரணம் தற்கொலையே: 2-வது பிரேதப் பரிசோதனையில் உறுதி

டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் குழுவின் 11 பக்க அறிக்கையில், திவிஷாவின் மரணம் தற்கொலை எனத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
திவிஷா சர்மா இறப்பு தற்கொலையே
கணவனுடன் திவிஷா
Published on

புதுடெல்லி,

முன்னாள் நடிகையும் மாடலுமான திவிஷா சர்மா தற்கொலை செய்திருப்பதாக, டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் குழு நடத்திய 2-வது பிரேதப் பரிசோதனையின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்கொலை

மத்தியபிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்த வக்கீல் சமர்த் சிங்கிற்கும் திவிஷா சர்மாவிற்கும் கடந்த ஆண்டு டிசம்பர் 9-ந் தேதி திருமணம் நடந்தது. போபாலில் கணவர் வீட்டில் வசித்து வந்த திவிஷா, கடந்த மே 12-ந் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து திவிஷாவின் குடும்பத்தினர் போலீசில் அளித்த புகாரில், திவிஷாவின் கணவர் சமர்த் சிங் மற்றும் மாமியார் கிரிபாலா சிங் ஆகியோர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. திருமணமான 6 மாதங்களில் திவிஷாவுக்கு தொடர்ந்து மனரீதியான துன்புறுத்தல் அளிக்கப்பட்டதாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.

இரண்டாம் பரிசோதணை

போபால் எய்ம்ஸ் மருத்துவமனை நடத்திய முதல் பிரேதப் பரிசோதனையில் குறைபாடுகள் இருந்ததாகக் குடும்பத்தினர் தெரிவித்தனர். இந்த குற்றச்சாட்டுகளுக்குத் தீர்வு காணவும், முக்கிய சந்தேகங்களைத் தெளிவுபடுத்தவும். மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் இரண்டாவது பிரேதப் பரிசோதனைக்கு உத்தரவிட்டது. பிறகு, சிபிஐ இந்த விசாரணையை ஏற்றுக்கொண்டு சமர்த் மற்றும் கிரிபாலாவைக் கைது செய்தது.

இதற்கிடையே எய்ம்ஸ் மருத்துவமனையில், 2-வது பிரேதப் பரிசோதனை மே 24 அன்று மேற்கொள்ளபட்டது. பரிசோதனைக்கு அமைக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட மருத்துவக் குழு, பரிசோதனை அறிக்கையை முத்திரையிடப்பட்ட உறையில் வைத்து, அதை சிபிஐ-யிடம் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க அதன் இறுதி மருத்துவ அறிக்கையை அரசு முத்திரையிடப்பட்ட உறையில் தனது 11 பக்க மருத்துவக் கருத்தை வைத்து ஜூலை 10 அன்று சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டது.

தற்கொலையே காரணம்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் குழுவின் 11 பக்க அறிக்கையில், திவிஷாவின் மரணம் தற்கொலை எனத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது. மேலும், அவரது உடலில் உடல் ரீதியான தாக்குதல்கள் மற்றும் காயங்கள் எதுவும் இல்லை என்றும் மருத்துவக் குழு தெரிவித்துள்ளது. இந்த அறிக்கை திவிஷா சர்மா மரணம் தொடர்பான சிபிஐ விசாரணையில் முக்கிய ஆதாரமாக அமைந்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com