

புதுடெல்லி
தமிழக அரசின் பதவிக்காலம் மே மாதம் 10-ந் தேதியுடன் நிறைவடைகிறது. இதனை தொடர்ந்து, தமிழக சட்டசபைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதன்படி, ஏப்ரல் 23-ந்தேதி ஒரே கட்டத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
இதில், ஆளும் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தில் வருகிற 20, 21 ஆகிய நாட்களில் ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் டெல்லி முன்னாள் முதல்-மந்திரியான கெஜ்ரிவால் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். அப்போது, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மீண்டும் முதல்-அமைச்சராவதற்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார்.
அந்த 2 நாட்களில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, தி.மு.க. தலைமைக்கு அவர் ஆதரவு கேட்கிறார். பல்வேறு பேரணிகளிலும் பங்கேற்க உள்ளார். அப்போது, தி.மு.க. அரசின் நிர்வாகம், நல திட்டங்கள் ஆகியவற்றை குறிப்பிட்டு பிரசாரத்தில் ஈடுபடுகிறார். டெல்லி ஆம் ஆத்மி தலைமை வட்டாரங்கள் இதனை தெரிவித்து உள்ளன.