

புதுடெல்லி
உதயநிதி ஸ்டாலினை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
தஞ்சையில் நேற்று தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும் மற்றும் தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி பேசினார். அப்போது, முதல்-அமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசினார். இது சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையானது. உதயநிதியின் பேச்சுக்கு த.வெ.க. சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் த.வெ.க. மகளிர் அணி சார்பில், தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தேசிய மகளிர் ஆணையத்திடமும் புகார் அளிக்கப்பட்டது.
த.வெ.க. அளித்த புகாரின் அடிப்படையில் உதயநிதி ஸ்டாலின் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளில் தஞ்சை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து தஞ்சையில் இருந்து இன்று சென்னை போலீஸ் குழுவினர், சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி ஸ்டாலின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கைது செய்து, விசாரணைக்காக தஞ்சைக்கு அழைத்து சென்றனர்.
உதயநிதியை கைது செய்வதற்கு போலீசார் வந்தது பற்றி தகவல் அறிந்த தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். இதனால் உதயநிதியின் வீட்டின் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். உதயநிதி கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதால் தி.மு.க.வினர் ஆங்காங்கே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. நாடாளுமன்ற மக்களவையில் தி.மு.க. எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து முழக்கம் எழுப்பினர். இதனால் அவையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து மக்களவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் வெளியே வந்த தி.மு.க. எம்.பி.க்கள் தொடர்ந்து கண்டன முழக்கங்கள் எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அக்கட்சியின் எம்.பி.க்கள் திருச்சி சிவா, டி.ஆர். பாலு, ஆ. ராசா, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் உதயநிதி கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் கோஷங்களை எழுப்பினர்.