

புதுடெல்லி,
தமிழ்நாட்டில் ஜாவகர் நவோதய பள்ளிகளை நிறுவதை தமிழக அரசு எதிர்ப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்தநிலையில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி நாகரத்னா அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
இந்த நவோதயா பள்ளிகள் வழக்கில், உயர்நிலை அளவில் ஆலோசனை நடந்து வருவதால் 12 வார கால அவகாசம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் 12 வாரம் அவகாசம் வழங்க முடியாது, வேண்டுமென்றால் 3 வாரம் காலம் அவகாசம் வழங்குகிறோம் என்று நீதிபதி அமர்வு குறிப்பிட்டு, தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் அமையும் இடங்களை கண்டடைவது குறித்து தெரிவிக்க கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, நீதிபதி நாகரத்னா அமர்வு நவோதயா பள்ளிகளை தமிழகம் மட்டும் புறக்கணிப்பது ஏன்? கேள்வி எழுப்பினார். மேலும் அவர் கூறியதாவது:
மத்திய அரசு 9ம் வகுப்பில் மூன்றாவது மொழியை அறிமுகப்படுத்த வேண்டாம். சிபிஎஸ்இ (CBSE), ஐசிஎஸ்இ (ICSE) மற்றும் மாநிலப் பாடத்திட்டம் என அனைத்திலும் 10ம் வகுப்பு என்பது ஒரு பொதுத் தேர்வு (board exam) ஆண்டாகும். 8ம் வகுப்பு முடிந்தவுடனேயே அதற்கான அழுத்தம் தொடங்கிவிடுகிறது.
9ம் வகுப்பில் ஒரு புதிய மொழியை கற்பிக்க துவங்காமல், அதற்குப் பதிலாக 6ம் வகுப்பிலேயே அதைத் தொடங்கலாம், ஆனால் 9ம் வகுப்பில் மூன்றாவது மொழி கற்பிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்.