

புதுடெல்லி,
நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் கடந்த 2023-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இது அடுத்த தொகுதி மறுவரையறைக்குப் பின்னர் அமலுக்கு வரும் என்றாலும், சட்டம் நிறைவேற்றிய பிறகும் பெண்களுக்கு போதிய பங்களிப்பை அரசியல் கட்சிகள் வழங்காதது கண்டறியப்பட்டு உள்ளது.
அந்தவகையில் சட்டம் நிறைவேற்றப்பட்ட மறுஆண்டு (2024) நடந்த தேர்தல்களில் வெறும் 10 சதவீதம் அளவுக்கே பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு இருப்பது ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் (ஏ.டி.ஆர்.) நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.
அதாவது அந்த ஆண்டு நடந்த நாடாளுமன்றம், மாநில சட்டசபை மற்றும் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல்களில் மொத்தம் 51,708 வேட்பாளர்கள் போட்டியிட்டு உள்ளனர். இதில் 5,095 பேர் மட்டுமே பெண்கள் ஆவர். இது 10 சதவீதத்துக்கும் குறைவு என தெரியவந்துள்ளது. இதன் மூலம் அரசியலில் நிலவும் பாலினப் பாகுபாடுகளை கையாள்வதில் ஆண் ஆதிக்க சட்டமன்ற உறுப்பினர்களின் தயக்கம் பிரதிபலிப்பதாக ஏ.டி.ஆர். வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.