

புதுடெல்லி,
முதுகலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு 2020-ம் ஆண்டு நடக்க இருந்த நிலையில், கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு இந்த ஆண்டு செப்டம்பரில் நடத்தப்பட்டது. இந்தத் தேர்வின் முடிவுகள் வந்த நிலையில் இன்னும் கவுன்சிலிங் நடத்தப்படாமல், இடங்கள் ஒதுக்கப்படாமல் இருக்கிறது.
இதனால், மருத்துவ படிப்புக்கான அட்மிஷன் தாமதம் ஆவதாகவும் உடனடியாக கவுன்சிலிங்கை நடத்தக் கோரியும் டெல்லியில் பயிற்சி மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். மருத்துவர்கள் போராட்டத்தால் மருத்துவ சேவை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் வெளியில் செல்வதை தடுக்கும் வகையில் சப்தர்ஜங் மருத்துவமனையின் அனைத்து மெயின் நுழைவு வாயில்களையும் போலீசார் மூடினர். மருத்துவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு அனைத்து இந்திய மருத்துவக் கூட்டமைப்பு கண்டித்து, நாளை காவல்துறையைக் கண்டித்துப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.