

அலகாபாத்,
இந்தியாவில் கொரோனா தீவிரமாக பரவி வரும் சூழ்நிலையில் வைரஸ் பரவலை தடுக்கும் ஒரேவழியான தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமெடுக்கத்தொடங்கியுள்ளன.
இந்நிலையில், மாட்டுச்சாணம் மற்றும் மாட்டு சிறுநீரை உடலில் பூசிக்கொள்வதால் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம் என்ற மூட நம்பிக்கையும் பல இடங்களில் பரவி வருகிறது.
குஜராத் மாநிலத்தின் பல்வேறு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மாட்டுக்கொட்டகைகளுக்கு வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரு முறை சிலர் கும்பலாகவோ அல்லது தனித்தனியாகவோ செல்கின்றனர்.
அங்கு அவர்கள் மாட்டுச்சாணம் மற்றும் மாட்டு சிறுநீரை உடல் முழுவதும் பூசிக்கொள்கின்றனர். இது போன்ற செயல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அல்லது கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் அல்லது வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைய செய்யும் என்று அவர்கள் நம்புகின்றனர்.
மாட்டுச்சாணம் மற்றும் மாட்டுசிறுநீரை உடல்முழுவதும் பூசிக்கொண்டு சூரிய வெளிச்சத்தில் நின்று உடலில் அந்த சாணம் காய்ந்தபின்னர் மாட்டுப்பாலில் உடலை கழுவுகின்றனர். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர்.
இது தொடர்பாக மாட்டுச்சாண குளியலில் ஈடுபட்ட மருந்து நிறுவனத்தில் துணை மேலாளராக பணிபுரிந்து வரும் கவுதம் மணிலால் கூறுகையில், மருத்துவர்கள் கூட இங்கு வந்து மாட்டுச்சாண குளியலில் ஈடுபடுவதை பார்த்துள்ளோம். இந்த சிகிச்சை முறையால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் எனவும், கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது எந்த வித பயமும் இன்றி அவர்கள் அருகில் செல்லலாம் எனவும் நினைக்கின்றனர் என்றார்.
ஆனால், இந்த மூடநம்பிக்கை பழக்கத்தை கைவிட வேண்டும் என்று மருத்துவர்கள், விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக இந்திய மருத்துவ அசோசியேசன் தேசிய தலைவர் டாக்டர்.ஜெயலால் கூறுகையில், மாட்டு சாணம் அல்லது மாட்டு சிறுநீர் கொரோனா வைரசை எதிர்க்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது என்று கூற எந்த வித அறிவியல் ரீதியிலான ஆதாரங்களும் இல்லை. இந்த நடைமுறை முழுவதும் மூடநம்பிக்கையை சார்ந்தது. மாட்டுச்சாணம் அல்லது மாட்டு சிறுநீரை எடுத்துக்கொள்ளுதலால் மருத்துவ ரீதியில் உடலில் பிரச்சினைகள் ஏற்படாலாம் என்றார்.