நடப்பாண்டில் உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி 18 சதவீதம் அதிகரிப்பு - மத்திய அரசு தகவல்

நடப்பாண்டில் உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி 18 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நடப்பாண்டில் உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி 18 சதவீதம் அதிகரிப்பு - மத்திய அரசு தகவல்
Published on

புதுடெல்லி,

மத்திய நிலக்கரித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

நிலக்கரி உற்பத்தி திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன், அண்மையில் 141 புதிய நிலக்கரி சுரங்கங்கள் ஏலத்திற்கு விட்டன. ஏலம் விடப்பட்ட சுரங்கங்களை செயல்பாட்டிற்கு கொண்டு வரும் நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மற்றும் மத்திய அமைச்சகங்களுடன் ஒருங்கிணைத்து விரைவுபடுத்தப்பட்டுள்ளன.

ரெயில்வேத்துறை, மின்துறை அமைச்சங்களுடன் ஒருங்கிணைந்து மின் உற்பத்திக்கு வழங்கப்படும் நிலக்கரி தொடர்பான நடவடிக்கைகளை மத்திய நிலக்கரி அமைச்சகம்,தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்த ஒருங்கிணைந்த முயற்சிகளின் விளைவாக, உள்நாட்டு நிலக்கரி பயன்பாட்டின் கீழ் உள்ள அனல்மின் நிலையங்களில் நிலக்கரியின் இறுதி இருப்பு, இந்த ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி நிலவரப்படி, 25.6 மில்லியன் டன் ஆக இருந்தது.

மேலும் மின்துறைக்கான உள்நாட்டு நிலக்கரி விநியோகம் கடந்த ஆண்டின் இதே காலத்தை விட 12 சதவீதம் அதிகமாக உள்ளது. இது இதுவரை இல்லாத அதிகபட்ச விநியோகமாகும். மொத்த உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி முந்தைய ஆண்டின் இதே காலத்தை விட 18 சதவீதம் அதிகமாக உள்ளது. இதனால் கோல் இந்தியா லிமிடெட் வளர்ச்சி 17.5 சதவீதத்தை எட்டியுள்ளது.

கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் அனைத்து ஆதாரங்களிலிருந்தும் மின் துறைக்கு நாளொன்றுக்கு உள்நாட்டு நிலக்கரி 296.5 ரேக்குகள் வழங்கப்படுகின்றன. இது முந்தைய ஆண்டின் இதே காலத்தை விட 19 சதவீதம் அதிகம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com