மாணவர் சேர்க்கைக்கு பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் - ஜிப்மர் நிர்வாகம் எச்சரிக்கை

மாணவர் சேர்க்கை தொடர்பான அனைத்து தகவல்களும் ஜிப்மரின் மூலமாக மட்டுமே பெறப்பட வேண்டும்.
மாணவர் சேர்க்கைக்கு பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் - 
ஜிப்மர் நிர்வாகம் எச்சரிக்கை
Published on

புதுச்சேரி,

மாணவர் சேர்க்கைக்கு பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று பொதுமக்களுக்கு ஜிப்மர் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி கோரிமேடு ஜிப்மரில் பல்வேறு பாடப்பிரிவுகளில் அதிகாரப்பூர்வ நடைமுறைக்கு புறம்பாக மாணவர் சேர்க்கை பெற்றுத்தருவதாக சிலர் கூறி வருவதாக தகவல்கள் மற்றும் புகார்கள் கிடைத்துள்ளன. ஜிப்மரில் அனைத்து கல்வி பாடப்பிரிவுகளுக்குமான மாணவர் சேர்க்கை முற்றிலும் விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் அடிப்படையில் முழுமையான வெளிப்படைத்தன்மை மற்றும் தகுதி அடிப்படையிலும் மட்டுமே நடைபெறுகிறது.

தேசிய அதிகார அமைப்பு

இளநிலை, முதுநிலை மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளுக்கான சேர்க்கைகள், மத்திய அளவிலான நுழைவுத்தேர்வுகள், கலந்தாய்வு மற்றும் இடஒதுக்கீடு நடைமுறைகள் மூலம் தேசிய அதிகார அமைப்புகளால் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன. எம்.எஸ்சி. நர்சிங், இணை சுகாதார அறிவியல், முனைவர் பட்ட மேலாய்வு ஆராய்ச்சி கல்வி மற்றும் சில கல்வி பாடப்பிரிவுகளுக்கான சேர்க்கைகள் ஜிப்மர் அறிவிக்கும் அதிகாரப்பூர்வ நுழைவுத்தேர்வுகள் மற்றும் தேர்வு நடைமுறைகள் மூலம் நடைமுறையில் உள்ள விதிமுறைகளுக்கு இணங்க மட்டுமே நடத்தப்படுகின்றன.

போலி வாக்குறுதிகள்

மாணவர் சேர்க்கை தொடர்பான அனைத்து தகவல்களும் ஜிப்மர் வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தகவல் தொடர்பு வழிகள் மூலமாக மட்டுமே பெறப்பட வேண்டும். ஜிப்மரில் பணியாற்றும் எந்த ஊழியரானாலும், முன்னாள் ஊழியரானாலும், முகவர், இடைத்தரகர் அல்லது ஜிப்மர் ஊழியர்களின் உறவினர்களானாலும், நிர்ணயிக்கப்பட்ட சேர்க்கை நடைமுறைக்கு வெளியே எந்தவொரு பாடத்திற்கும் மாணவர் சேர்க்கையை ஏற்பாடு செய்யவோ, உறுதி செய்யவோ எந்த அதிகாரமும் இல்லை.

ஏமாற வேண்டாம்

எனவே பொதுமக்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஜிப்மரில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் இத்தகைய போலி வாக்குறுதிகள் மற்றும் தவறான தகவல்களை நம்பவோ, அதன் அடிப்படையில் செயல்படவோ வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். ஜிப்மரில் மாணவர் சேர்க்கைக்கு பணம் கொடுத்து யாரும் ஏமாற வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com