

புதுடெல்லி
மேக் இன் இந்தியா, ஆத்மநிர்பார் பாரத் உள்ளிட்ட அரசின் திட்டங்களால் இந்தியா வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த நிலையில், நடப்பு 2026-27 நிதி ஆண்டுக்கான முதல் காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.8 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
இதுபற்றி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், பிரதமர் மோடி அரசின் கீழ் இந்திய பொருளாதாரம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது.
உலகளாவிய நிச்சயமற்ற சூழலை இந்திய பொருளாதாரம் ஆனது, மீண்டும் வெற்றி கொண்டு, 2026-27 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.8 சதவீதம் என்ற அளவில் உள்ளது. பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமைக்கான உறுதியான சான்றாக இது உள்ளது என பதிவிட்டு உள்ளார்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்ஸ்டாகிராம் வீடியோ வழியே இன்று உரையாற்றினார். அப்போது அவர் மக்களுக்கு தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். தொடர்ந்து அவர், அரசின் கொள்கைகள் நன்றாகவும், நோக்கங்கள் தெளிவாகவும் உள்ளன என கூறியதுடன், அதனாலேயே நாடு, வளர்ச்சிக்கான புதிய உச்ச நிலையை அடைந்து வருகிறது என்றும் கூறினார்.
சுதேசியையும், சுயசார்பையும் மக்கள் தொடர்ந்து வலியுறுத்தினால், 100-வது ஆண்டு சுதந்திரத்தின்போது நாட்டின் இளைஞர்களுக்கு வளர்ச்சியடைந்த இந்தியாவை நாம் பரிசாக தர முடியும் என்றும் கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து, விடுமுறையில் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் வெளிநாடுகளில் திருமணங்களை நடத்த வேண்டாம் என்றும், தேவையின்றி தங்கம் வாங்க வேண்டாம் என்றும் மக்களை கேட்டு கொண்டுள்ளார்.