

கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநிலத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. அந்த கட்சியின் தேர்தல் அறிக்கையில், மாநிலம் முழுவதும் பொதுமக்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று ரேசன் பொருட்களை விநியோகிக்கும் துவரே ரேஷன் என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன் முன்னோட்டமாக கடந்த செப்டம்பர் மாதம் சுமார் 3 ஆயிரம் ரேஷன் பணியாளர்கள் மூலம் சிறிய அளவில் இந்த திட்டத்தை செயல்படுத்தியது. அதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது இந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி, இன்று துவரே ரேஷன் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் 10 கோடிக்கும் அதிகமான மக்கள் பயனடைவார்கள் என்று தெரிவித்த அவர், நாட்டிலேயே இது ஒரு முன்னோடியான திட்டம் என்று குறிப்பிட்டார்.