டெல்லி ஐகோர்ட்டில் இரட்டை இலை சின்னம் வழக்கு ஜூலை 4-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

இரட்டை இலை சின்னம் வழக்கை ஜூலை 4-ந் தேதிக்கு ஒத்திவைத்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
டெல்லி ஐகோர்ட்டில் இரட்டை இலை சின்னம் வழக்கு ஜூலை 4-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
Published on

புதுடெல்லி,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டதை எதிர்த்து சசிகலா, டி.டி.வி.தினகரன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதிகள் ஜி.எஸ்.சிஸ்தானி, சங்கீதா திங்ரா சேகல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன் வாதாடுகையில், ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலாவும், தினகரனும் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்த பிறகுதான் கட்சியின் அனைத்து சட்ட விதிகளும் மீறப்பட்டது என்றும், எனவே அவர்களிடம் கட்சியையும், சின்னத்தையும் எப்படி ஒப்படைக்க முடியும்? என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் தங்களது தரப்பில் இருந்துதான் அதிகப்படியான பிரமாண பத்திரங்கள் தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், எதிர் அணியினர் வேண்டுமென்றே பொய்யான சில காரணங்களை கூறி விசாரணையை தாமதப்படுத்தி திசை திருப்பியதாகவும் கூறினார்.

இதையடுத்து நீதிபதிகள், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வருகிற ஜூலை 4-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com