

காசர்கோடு,
கேரளம் மாநிலம் காசர்கோடு பகுதியை சேர்ந்தவர் தன்யா. யூடியூபர். இவர் கடந்த மாதம் 1-ந் தேதி காசர்கோட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு வீடு திரும்பும்போது, மது அருந்தி விட்டு கார் ஓட்டி வந்ததாக தெரிகிறது. அப்போது போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டதை பார்த்ததும், காரை நிறுத்தாமல் வேகமாக ஆபத்தான முறையில் ஓட்டி சென்றார்.
இதையடுத்து போலீசார் ஜீப்பில், காரை பின்தொடர்ந்து விரட்டி சென்று தன்யாவை பிடித்தனர். விசாரணையில் அவர் மது அருந்தி இருப்பது தெரியவந்தது. உடனே அவரை காசர்கோடு அரசு ஆஸ்பத் திரிக்கு அழைத்து சென்று மருத்துவமனை பரிசோதனை செய்தனர். இதில் தன்யா மது அருந்தியது உறுதி செய்யப்பட்டது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரை பறிமுதல் செய்திருந்தனர். இந்தநிலையில் குடிபோதையில் கார் ஓட்டிய பெண் யூடியூபர் தன்யாவின் ஓட்டுனர் உரிமத்தை 3 மாதம் ரத்து செய்து மோட்டார் வாகன போக்குவரத்துதுறை நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் 3 நாட்கள் பயிற்சி வகுப்பில் பங்கேற்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.