

மும்பை,
மும்பை சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக சுங்கவரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் ஜோகன்ஸ்பெர்க்கில் இருந்து தோகா வழியாக மும்பை வந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் சுங்கவரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 2 வெளிநாட்டு பெண்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவர்களின் உடைமைகளை பிரித்து சோதனை நடத்தினர்.
இதில், அவர்கள் உடைமையில் 5 கிலோ ஹெராயின் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இவற்றின் சர்வதேச மதிப்பு ரூ.25 கோடி ஆகும். இதையடுத்து போதைப்பொருள் கடத்தி வந்த வெளிநாட்டை சேர்ந்த 2 பெண்களையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.