

மும்பை,
கத்தார் தலைநகர் தோகாவில் இருந்து பெங்களூருக்கு இண்டிகோ விமானம் ஒன்று வந்து கொண்டு இருந்தது. இந்த விமானத்தில் கேரளாவை சேர்ந்த முகமது சர்புதீன் உல்வார் என்ற பயணி வந்தார். இந்த பயணி அளவுக்கு அதிகமாக மது குடித்து உள்ளார்.
மேலும் இவர் விமானத்தில் மதுகுடிக்க முயன்ற போது, அதை விமான பணிப்பெண் தடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த அவர் பணிப்பெண்ணிடம் தவறாக நடந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் பயணிகளுடனும் தகராறில் ஈடுபட்டு ரகளையில் ஈடுபட்டார்.
இதையடுத்து விமானம் கடந்த சனிக்கிழமை இரவு அவசரமாக மும்பை சத்ரபதி சிவாஜி பன்னாட்டு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட பயணியை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பிடித்தனர்.
பின்னர் அவர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுபோதையில் விமானத்தில் ரகளையில் ஈடுபட்ட பயணியை கைது செய்தனர். மேலும் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.