

நொய்டா:
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் நேற்று குடிபோதையில் சென்ற ஒரு நபர், தடுமாறி சாக்கடை கால்வாய்க்குள் விழுந்துள்ளார். பின்னர் அங்கிருந்து கழிவுநீர் வேகமாக வெளியேறக்கூடிய 30 அடி நீளமுள்ள குழாய்க்குள் சிக்கிக்கொண்டார். வெளியேற முடியாமல் தவித்த அவர் உதவி கேட்டு கூச்சலிட்டுள்ளார். அவரது அழுகை சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குழாய்க்குள் சிக்கிய நபரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். உள்ளூர் மக்களின் உதவியுடன் அந்த கால்வாய் குழாயின் அடைப்பை சரிசெய்து உள்ளே சிக்கிய நபர் வெளியேறுவதற்கான வழியை ஏற்படுத்தினர். பின்னர் அவரை மீட்டனர். இந்த மீட்பு பணி தொடர்பான வீடியோவை உத்தர பிரதேச காவல்துறை சமூக வலைத்தத்தில் பதிவிட்டுள்ளது.
அந்த வீடியோவில், மீட்புக்குழுவினர் வாய்க்காலில் நுழைந்து, போதையில் இருந்த அந்த நபர் வெளியில் வருவதற்கான வழியை சுத்தப்படுத்துகின்றனர். இதனால் சில நிமிடங்களுக்குப் பிறகு, அந்த நபரை காப்பாற்ற முடிந்தது.
காவல்துறை வெளியிட்ட இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பயனர்கள், காவல்துறையின் துரித நடவடிக்கையை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
View this post on Instagram