திபெத்தில் நிலநடுக்கம்; 95 பேர் பலி

டெல்லி, பீகார் தலைநகர் பாட்னா, மேற்கு வங்காளம் மற்றும் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.
Published on

புதுடெல்லி,

சீனாவின் ஒரு பகுதியாக உள்ள திபெத்தில், நேபாள எல்லையையொட்டி இன்று காலை 6.50 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகி இருந்தது. 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

இதனை தொடர்ந்து, 6 நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டன. இதனால் பல பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கத்தில் 95 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 130 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இதன் தாக்கம், அருகிலுள்ள இந்தியா, நேபாளம் மற்றும் பூடான் ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டு உள்ளது. வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களில் இருந்த மின்விசிறி, விளக்குகள் நிலநடுக்க பாதிப்பால் லேசாக அசைந்தன.

இதனை தொடர்ந்து, டெல்லி, பீகார் போன்ற மாநிலங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. பீகாரில் தலைநகர் பாட்னா, முசாபர்பூர், மோதிஹாரி மற்றும் பெட்டையா மாவட்டங்களிலும் உணரப்பட்டது. திபெத்தின் ஷிகத்சே நகரிலும் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டெல்லி-என்.சி.ஆர். மற்றும் வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் கடுமையான அதிர்வுகள் உணரப்பட்டன. மேற்கு வங்காளம் மற்றும் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com