பண மோசடி வழக்கில் தேசிய பாதுகாப்பு படை முன்னாள் அதிகாரியின் ரூ.45 கோடி சொத்துகள் முடக்கம் - அமலாக்கத்துறை நடவடிக்கை

பண மோசடி வழக்கில் தேசிய பாதுகாப்பு படை முன்னாள் அதிகாரியின் ரூ.45 கோடி சொத்துகள் முடக்கம் - அமலாக்கத்துறை நடவடிக்கை

பண மோசடி வழக்கில் தேசிய பாதுகாப்பு படை முன்னாள் அதிகாரியின் ரூ.45 கோடி சொத்துகளை முடக்கியிருப்பதாக அமலாக்க இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
Published on

எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரிந்து வந்தவர் பிரவீன் யாதவ். இவர் மாற்றுப் பணியாக, அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள தேசிய பாதுகாப்பு படையில் (என்.எஸ்.ஜி.) கமாண்டராக நியமிக்கப்பட்டார். அப்போது, என்.எஸ்.ஜி. கமாண்டோ படையில் தான் ஐ.பி.எஸ். அதிகாரியாக இருப்பதாக கூறி, என்.எஸ்.ஜி.யில் ஒப்பந்தப் பணிகளுக்கான போலியான ஆவணங்களை ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கி பணம் பெற்று மோசடி செய்தார். அந்த மோசடி பணத்தில், அசையும், அசையா சொத்துகளை பிரவீன் யாதவும், அவரது குடும்பத்தினரும் வாங்கிக் குவித்தனர்.

இதுதொடர்பான புகாரின் பேரில் கடந்த ஆண்டு ஜனவரியில் பிரவீன் யாதவை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது மனைவி மம்தா யாதவ், தனியார் வங்கி ஒன்றில் மேலாளராக பணிபுரியும் பிரவீன் யாதவின் சகோதரி ரிது உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

இந்நிலையில், பண மோசடி தடுப்புச் சட்டத்தின்படி, தேசிய பாதுகாப்பு படை முன்னாள் அதிகாரி பிரவீன் யாதவ், அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான ரூ.45 கோடியே 20 லட்சம் மதிப்புள்ள 52 அசையும், அசையா சொத்துகளை முடக்கியிருப்பதாக அமலாக்க இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com