அலுவலகத்தில் மனைவியுடன் இந்தி பாடலுக்கு நடனமாடிய கல்வி அதிகாரி

வேடிக்கையாக மட்டுமே இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக நடனமாடிய கல்வி அதிகாரி கூறியுள்ளார்.
சண்டிகர்,
பஞ்சாப் மாநிலத்தின் மோகா மாவட்டத்தில் தொடக்க கல்வி அதிகாரி அலுவலகம் உள்ளது. இங்கு தேவி பிரசாத் என்பவர் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் சம்பவத்தன்று அலுவலகத்தில் அவரது மனைவியுடன் பிரபல இந்தி பாடலுக்கு நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஒரு நிமிடம் கொண்ட அந்த வீடியோவில், தேவி பிரசாத்தும், அவரது மனைவியும் அலுவலகத்திற்குள் கையில் துணியை வைத்துக்கொண்டு நடனமாடிய காட்சிகள் இருந்தன. வீடியோ வைரலானதை தொடர்ந்து கல்வித்துறை அதிகாரிகள் அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.
இதுகுறித்து தேவி பிரசாத் கூறுகையில், வீடியோ எடுக்கப்பட்ட நாளில் எனது அலுவலகத்தில் பணியில் இருந்தேன். அன்று எங்கள் திருமண நாள். எனவே எனது மனைவி அலுவலகத்துக்கு வந்தார். அப்போது வேடிக்கையாக மட்டுமே இந்த வீடியோ எடுக்கப்பட்டது என கூறினார். இதுதொடர்பாக அதிகாரிகள் துறை ரீதியாக அவரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.






